குடுத்தார் குடுத்தனவும்... இராஜராஜரே கூறியது....



குடுத்தார் குடுத்தனவும்...

எவ்வளவு நிதர்சனமான வார்த்தை இது..

இராஜராஜரே கூறியது....

தற்காலத்தில் இவ்வார்த்தைதான் நிதர்சனமானது.

தஞ்சை பெரியகோவில் கட்டி முடிக்கப்பட்டது. கோவிலுக்கு வந்து குவிந்த நிவந்தங்கள் மிகவும் பிரம்மாண்டம்.

அரசர் அவரது அக்கன், அரசனது தேவியர்,அதிகாரிகள்  மற்றும் பொது மக்கள், பொன்னாகவும், காசுகளாகவும், ஆடு மாடுகளாகவும், நிலங்களாகவும் வாரி வழங்கினார்.

நிவந்தமாக வந்தவற்றை கல்லில் வெட்டி ஆவணமாகப் பதிவு செய்கின்றனர்.

அரசனின் நேரடி வாய்மொழி உத்ரவாக இச்செய்தி கல்லில் வெட்டப்படுகிறது.

கல்வெட்டு வாசகம்.
***********************
நாங் குடுத்தனவும் அக்கன் குடுத்தனவும் நம் பெண்டுகள் குடுத்தனவும் மற்றும் குடுப்பார் குடுத்தனவும்
கல்லிலே வெட்டி அருளுக"

என்று கல்வெட்டு ஆரம்பமாகி நிவந்தங்களின் பட்டியல் பதிவு செய்யப்படுகிறது.

வாரி வழங்கியுள்ளனர்.

யார் யார் கொடுத்தது.?  எவ்வளவு கொடுத்தார்கள்.? என்ன கொடுத்தார்கள்.? அனைத்தும் கல்வெட்டுகளாய் உள்ளன..

அரசன் கொடுத்த பொன்.. தேவியர் கொடுத்த படிமம். ஒரு இடையர் கொடுத்த ஆடு. யானைப்பாகர் கொடுத்த காசு.. என்று பிரம்மாண்ட நிவந்தப்பட்டியல் இது.

குவிந்த நிவந்தங்களின் ஒரு பகுதியைப் பார்த்தால்..

நிவந்தங்களின் அளவையும், அவற்றின் இன்றைய மதிப்பையும் கணக்கிடுவோம். இக்கணக்கீடு வேலையை பேராசிரியர் நீலகண்ட சாஸ்திரி அவர்கள் 1937 ல் கணக்கிடுகிறார்.

சோழர்கால விலைவாசியும், தற்கால விலைவாசியையும் ஒப்பிட்டுப் பார்ப்போம்.

கோவில் கல்வெட்டுத்தரவுகளின் படி..

1 காசுக்கு 1200 வாழைப்பழங்கள் வாங்கலாம்.

 1 காசுக்கு 1/2 கழஞ்சு பொன் வாங்கலாம். ஒரு கழஞ்சு என்பது 5.2 கிராம். 1/2 கழஞ்சு என்பது 2.6 கிராம்.

1 காசுக்கு மூன்று ஆடுகள் வாங்கலாம்.

இராஜராஜன் மட்டும் கொடுத்த தங்க பாத்திரங்களின் அளவு.
41 599 கழஞ்சு பொன்.

ஒரு கழஞ்சு என்பது
5.2 கி.

ஆகவே

41599 × 4.2 = 216314.8 கிராம்.

ஒரு கிராம் தங்கத்தின் இன்றைய மதிப்பு ரூ 3800 என்றால்

216314.8 × 3800 =
82, 19 ,96,240 ரூ.

எண்பத்திரண்டு கோடியே பத்தொன்பது லட்சத்து தொண்ணூற்றாயிரத்து இருநூற்று நாற்பது ரூபாய்..

பொன் ஆபரணங்களின் அளவு 5100 கழஞ்சு.

வெள்ளிப்பாத்திரங்களின் அளவு 1,99,800 கிராம்.

குந்தவை கொடுத்தது, இராஜராஜனின் தேவியர் கொடுத்தது, அதிகாரிகள் கொடுத்தது, மக்கள் கொடுத்தது...

என்று அனைத்தையும் கணக்கிட்டால்.. தற்கால கணிப்பொறி தடுமாறும்.

கோவிலுக்குச் சொந்தமாய் சோழதேசத்தின் அனைத்துப் பகுதிகளிலும் நிலங்கள் இருந்தது.

அருமொழிதேவ வளநாட்டில் இருக்கும் நிலங்களில் இருந்து கிடைத்த வருவாய்.
68987 கலம் 2 தூணி 2 குறுனி .. நெல்.. மற்றும் 297 கழஞ்சு பொன்.

ராஜேந்திரசிங்க வளநாட்டிலிருந்து
 51390  கலம் நெல், மற்றும் 1012 கழஞ்சு பொன்.

ஜெயங்கொண்ட சோழமண்டலம் மற்றும் பல பகுதிகள். இலங்கையில் கூட நான்கு ஊர்கள் பெருவுடையாருக்கு சொந்தமாயிருந்தன.

வருமானமாக வந்த காசுகளும் ஏராளம்.

பொன்னாகவும், பொருளாகவும், நிலமாகவும், நெல்லாகவும், காசுகளாகவும், ஆடு மாடுகளாகவும் பெருவுடையார் கோவில் நிரம்பி வழிந்தது..

இந்நிலை அந்தக் காலம்................

தற்காலத்திற்கு வருவோம்..

இன்று ...
பெருவுடையார் கோவிலுக்கு சொந்தமாய் எந்த ஒரு நிலமும் கிடையாது. நிரந்தர வருவாய் கிடையாது..

இதை கோவிலுடன் தொடர்புடைய பெரியவர்களிடமும், கோயிலை பரிபலனை செய்து வரும் அறநிலையத்துறை அதிகாரிகளிடமும் விசாரித்து உறுதி செய்தது.

குடமுழுக்கு தேதி அறிவித்தாகிவிட்டது.

அரசு நிதி ஒதுக்கி வந்து சேர்வதில் தாமதம்.

குடமுழுக்குப் பணிகள் நடைபெற வேண்டுமே..?

என்ன செய்வது..?

வந்தார்கள் இராஜராஜனின் அபிமானத்துக்குரிய...
" கொடுப்பார்கள் "

ஒவ்வொருவரும் ஒவ்வொருபணியை ஏற்றார்கள். நான் கொடிமரம், நான் பூஜை செலவு, கலசத்திற்கு முலாம் பூசும் தங்கத்தின் அளவு என்னுடையது,  நான் அபிசேகப் பொருட்கள், நான் தடுப்பு அமைக்கிறேன்..

என்று பலரும் கடும் போட்டிப் போட்டு கொடுத்தார்கள்.

குடுப்பார் குடுத்த நிதியினாலே குடமுழுக்கு நடை பெற உள்ளது."

Comments

Popular posts from this blog

மேல்மலையனூர் அங்காளம்மன்

திருநீலகண்டப்பதிகம்

கொரானா ஏன்? எப்படி? எதனால்?